

தமிழக வெற்றிக்கழகம் வரும் தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக - அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருப்பதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நேற்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டணி அமைத்து போட்டியிட ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால், தனித்து போட்டியிடும் முடிவை கைவிட்டு பாஜகவுடன் தவெக கை கோர்க்க போகிறதா என்று அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், இது தொடர்பாக தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
மக்கள் பிரச்சனைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கத்தில், வழக்கம் போலவே தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்புப் படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக யூகங்களின் அடிப்படையில் தினசரி பல்வேறு செய்திகள் பரப்பப்படுகிறது. கழக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட, கழகத்தின் சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே கழகத் தோழர்கள் பின்பற்றவும்” என்று தெரிவித்துள்ளார்.