கரூர் சம்பவம் குறித்து வதந்தி: கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக, தவெக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் சம்பவம் குறித்து வதந்தி: கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
Published on

சென்னை,

கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம் (வயது 38), தவெக உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (36), தவெக நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த சரத்குமார் (32) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 22 பேரை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், கரூர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி கைது செய்யப்பட்ட சரத்குமார், சகாயம் ஜேம்ஸ், சிவனேஸ்வரனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 3 பேரும் போலீஸ் காவலுடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com