

சென்னை,
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் ஆர்வத்தோடு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று (திங்கட்கிழமை) தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல் கொடுப்பதற்கும் கமல்ஹாசன் உள்ளாட்சி-உரிமைக்குரல் முதல் கட்ட பிரசார பயணத்தை 27-ந்தேதி (இன்று) காஞ்சீபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து தொடங்குகிறார். 30-ந் தேதியன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் பிரசாரத்தை தொடர்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.