தொண்டியில் பாய்மர படகு போட்டி

தொண்டியில் பாய்மர படகு போட்டி நடந்தது.
தொண்டியில் பாய்மர படகு போட்டி
Published on

தொண்டி, 

தொண்டியில் இந்து ஜனநாயக பேரவை சார்பில் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மறைந்த பழனி நினைவாக பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இந்து ஜனநாயக பேரவை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.சவுத்ரி ஆகியோர் படகு போட்டியை தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் 27 பாய்மர படகுகள் கலந்து கொண்டன. ஏழு கடல் மைல் தூரம் சென்று வந்த இப்படகு போட்டியில் ஒரு படகுக்கு ஆறு பேர் வீதம் போட்டி போட்டு காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல் படகுகளை இயக்கினர். போட்டி 2 மணி அளவில் தொடங்கியது. ஆனால் கடலில் காற்று அதிகமாக இல்லாததால் மாலை 6 மணிக்கு மேல்தான் படகுகள் கரைக்கு வந்தன. இப்போட்டியில் முதல் பரிசு தொண்டி புதுக்குடி இளஞ்சியம் சின்னத்தம்பி, 2-ம் பரிசு கருப்பையா ரெத்தினவேல், 3-ம் பரிசு கோட்டைப்பட்டினம் வ.புதுக்குடி குணா தனுஸ்ரீ, 4-ம் பரிசு தொண்டி புதுக்குடி தில்லை நடராஜன், 5-ம் பரிசை பாசிப்பட்டினம் வண்ணார காளி ஆகியோரது படகுகள் பெற்றன. இந்த போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர். இதையொட்டி திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் கடலோர காவல் படை போலீசார், மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com