

சேலம்,
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா (வயது 48). இவர் நேற்று மாலை ஜாகீர் அம்மாபாளையம் விஜயராகவன் 4-வது கிராஸ் பூங்கா அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் பின் இருக்கையில் இருந்தவர், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, நடந்து சென்று கொண்டிருந்த லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலிக்கொடியை பிடித்து இழுத்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத லாவண்யா, கீழே அமர்ந்தவாறு தாலிக்கொடியை இறுக்கி பிடித்து கொண்டார். ஆனாலும் 4 பவுன் சங்கிலியை அந்த நபர் பறித்து சென்றார். இதில் லாவண்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து லாவண்யா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.