சேலம்: பெண்ணின் வீட்டுக்கு கடன் வசூலிக்க சென்ற வாலிபர்கள் மீது தாக்குதல் - 2 பேர் கைது

தாக்குதல் குறித்து இருதரப்பை சேர்ந்தவர்களும் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
சேலம்: பெண்ணின் வீட்டுக்கு கடன் வசூலிக்க சென்ற வாலிபர்கள் மீது தாக்குதல் - 2 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் தென் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவர் தனியார் வங்கி ஒன்றில் பணம் வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். இவர், சம்பவத்தன்று இரவு தனது நண்பரான கார்த்தி (26) என்பவருடன் மொபட் வாங்க கடன் வாங்கிய சூரமங்கலம் சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (24) என்பவரது வீட்டுக்கு மாத தவணை வசூலிப்பதற்காக சென்றனர். அப்போது லட்சுமிக்கும், விஜய்க்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தனலட்சுமியை, விஜய் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது அலறல் சத்தத்தை கேட்டு தனலட்சுமியின் கணவர் சவுந்திரராஜன், மாமனார் குப்பன் மற்றும் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர்.

2 பேர் கைது

பின்னர் அவர்கள் விஜய், கார்த்தி ஆகியோரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து இருதரப்பை சேர்ந்தவர்களும் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விஜய், கார்த்தி, சவுந்திரராஜன், குப்பன், திவன்ராஜ் (25) உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சவுந்திரராஜன், திவன்ராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com