

சேலம்
சேலம் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற தீரன் சின்னமலையின் நினைவு நாள் வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதேபோன்று ஆடிப்பெருக்கு விழாவும் வருகிறது. இதனை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், ஆகஸ்டு 22-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவார்கள். இதை தவிர உருளுதண்டம் போட்டும், அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்டு 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் இளம்பகவத் அறிவித்து உள்ளார். அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதேநேரம் மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகள் ஆகஸ்டு 8-ந்தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.