சேலம்: வரி பாக்கியை நூதன முறையில் வசூல் செய்த ஊராட்சி செயலாளர்

கிராமத்தின் வளர்ச்சிக்காக மக்களின் கால்களில் விழுந்ததை பார்த்த பலரும், தங்களது வரி பாக்கியை உடனே செலுத்தி வருகின்றனர்.
 வரி பாக்கி காலில் விழுந்து வசூல் செய்த ஊராட்சி செயலாளர்
Published on

சேலம்,

அரசு அதிகாரி ஒருவர் கிராம மக்களின் கால்களில் விழுந்து வரி வசூல் செய்யும் நெகிழ்ச்சியான சம்பவம் சேலம் அருகே அரங்கேறியுள்ளது.

நீண்ட நாள் வரி பாக்கி

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள சாணாரப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் நீண்ட நாட்களாக வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட உள்ளாட்சி வரிகளை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிரடி முடிவு

அதிகாரிகள் எத்தனையோ முறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் கேட்டுப்பார்த்தும் பொதுமக்கள் வரி செலுத்த முன்வரவில்லை. இதனால், கிராமத்தின் வளர்ச்சி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சாணாரப்பட்டி ஊராட்சி செயலாளர் மாதவன் ஒரு அதிரடி மற்றும் உருக்கமான முடிவை எடுத்தார். அதன்படி அப்பகுதிக்கு நேரில் சென்றார். வீதி வீதியாக சென்ற அவர், திடீரென வரி பாக்கி வைத்துள்ள பொதுமக்களின் கால்களில் விழுந்து வணங்கினார்.

வேண்டுகோள்

கிராமத்தின் முன்னேற்றத்திற்காக வரிப் பாக்கியை உடனே செலுத்துங்கள்" என்று கைகூப்பி, காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தார். கடந்த 2 நாட்களாக ஊராட்சி செயலாளர் மாதவன் இப்படி வீடு வீடாக சென்று மக்களின் கால்களில் விழுந்து வரி வசூல் செய்து வரும் நடவடிக்கை, அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வரி செலுத்தி வருகின்றனர்

ஒரு அரசு அதிகாரி, தன்மானத்தை பார்க்காமல் கிராமத்தின் வளர்ச்சிக்காக மக்களின் கால்களில் விழுந்ததை பார்த்த பலரும், தங்களது வரி பாக்கியை உடனே செலுத்தி வருகின்றனர். அரசு அதிகாரியின் இந்த நூதன மற்றும் பாச போராட்டம், தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com