சேலம்: குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

எதிர்பாராதவிதமாக குட்டையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
சேலம்,
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
”சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், பைரோஜி அக்ரஹாரம் குரூப் கிராமத்தில் உள்ள அரசம்பாளையம் மலை அடிவாரத்தில் நேற்று முன்தினம் மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் குளித்துக் கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மின்னக்கல் கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரின் மகன்கள் நிஷாந்த் (வயது 23) மற்றும் பிரசாந்த் (வயது 19) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இம்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






