ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த தமிழக கவர்னருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் வைக்கப்பட்ட கலசத்தில் இருந்து புனித நீரானது கவர்னர் மீது தெளிக்கப்பட்டது.

பின்னர் ஸ்படிக லிங்க தரிசன பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்ததுடன் கருவறையில் உள்ள சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தையும் குடும்பத்தோடு பார்த்து ரசித்தார். தொடர்ந்து கார் மூலமாக புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற கவர்னர் இரண்டு கடல் சங்கமிக்கும் பகுதியான அரிச்சல் முனை பகுதியை பார்வையிட்டார்.

அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டுக்கு வருகை தந்து அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார்.தொடர்ந்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். கவர்னர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில், பேருந்து நிலையம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com