நெல்லையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுமானத்தின் போது ஆற்று மணலை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுமானத்தின் போது ஆற்று மணலை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுமானத்தின் போது ஆற்று மணலை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
Published on

மதுரை,

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கடந்த 2018 ஆம் ஆண்டு திருநெல்வேலி பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த கட்டுமானப் பணியின் போது சுமார் 100 கோடி அளவிற்கு தாமிரபரணி ஆற்று மணல் கடத்தப்பட்டதாக நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், திருநெல்வேலியில் பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகிலேயே தாமிரபரணி ஆறு இருப்பதால், பேருந்து நிலையத்தின் அடித்தளம் அமைப்பதற்காக தோண்டியபோது சுமார் 30 அடி ஆளத்திலேயே ஆற்று மணல் கிடைத்ததாகவும், இதனை நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அரசுக்கு 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணைக்கு உதவி செய்ய சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவரை சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருநெல்வேலி பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள மணலில் அறிய வகை தாதுக்கள் உள்ளதா என சோதனை செய்ய அணுசக்தி துறையின் உதவியை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com