தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட சங்ககால மணல் கல்சிற்பம்: தொல்லியல் ஆர்வலர் தகவல்


தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட சங்ககால மணல் கல்சிற்பம்: தொல்லியல் ஆர்வலர் தகவல்
x

தருவைக்குளம் அருகே சுண்டன்பச்சேரி பகுதியில் சிதைவடைந்த நிலையில் மணல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் ஆன கட்டிட தூண்கள் காணப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி-தருவைக்குளத்தில் கண்டறியப்பட்ட சங்க காலத்தினை சார்ந்த மணல் கல்சிற்பம் மற்றும் இடைக்காலத்தினை சார்ந்த கருங்கல் வழிபாட்டு சிற்பம் குறித்து வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், தருவைக்குளம் கிராமத்தின் உள்கிராமமான சுண்டன்பச்சேரியின் தென்பகுதியில் காணப்படும் மயான தளத்தின் பின்புறம் முட்புதர்கள் நிறைந்த தரிசு நிலத்தில் சிதைவடைந்த நிலையில் மணல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் ஆன கட்டிட தூண்கள் காணப்பட்டது. அவற்றை கூர்ந்து கவனிக்க தலைகீழாக கிடந்த சுமார் 20 அங்குலம் உயரமும் 15 அங்குலம் அகலமும் கொண்ட ஓர் கருங்கல்லை திருப்பி பார்த்திட அதில் மிகவும் வித்தியாசமான மற்றும் தனித்துவமான ஒரே பீடத்தில் அருகருகே அம்மையும், அப்பனும் அமர்ந்து அருள் பாலிக்கும் அம்சம் கொண்ட தெய்வ திருமேனிகளின் அமைப்பு குறிப்பிடத்தக்கது.

இருவரின் வலது கைகளில் ஆயுதம் ஏந்தியவாறு, இருவரின் இடது கையும் அவரவர் இடது தொடையில் வைத்தது போன்று உள்ளது. அப்பனின் வலது பாதமும் மற்றும் அன்னையின் இடது பாதமும் பீடத்தை விட்டு வெளியே வடிவமைப்பு செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இருவரின் சிகையலங்காரமும் சாய்வு கொண்டை அமைப்பில் காணப்படும் அழகு அற்புதமான தோற்றம் ஆகும் என்று தெரிவித்தார்.

இதன் காலகட்டம் 13- 15ம் நூற்றாண்டின் காலகட்டத்தினை சார்ந்ததாக கருதலாம். இவர்கள் இருவரின் அமைப்பு குலசை ஞாணமூர்த்தீஸ்வரர் மற்றும் முத்தாரம்மன் அமர்ந்து உள்ளது போன்றும், கொண்டை அமைப்பினை காணும் பொழுது திருமால் (கல்லழகர்), லட்சுமி போன்றும் உள்ளது.

மேலும் தருவைக்குளம் ஊரில் அமைந்துள்ள காடோடிசாமி ஆலயத்தில் பக்தர்கள் தேங்காய் உடைக்க பயன்படுத்தி வரும் மணல் கலவை கல்லில் காணப்படும் மிக மிக தொன்மையான இரட்டை அபூர்வ சிற்பமாக ஓர் பசுமாடு மற்றும் ஓர் கண்ணுகுட்டி வடிவமைப்பு செய்யப்பட்டது குறித்தும் புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இந்த சிற்பம் சங்க காலத்தினை சார்ந்தது போன்று உள்ளது என்றும் தனது கள ஆய்வு விபரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

இவைகள் குறித்த தகவல்கள் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக தொல்லியல் துறையின் அதிகாரிகள் வசம் பகிரப்பட்டுள்ளன. ஏற்கெனவே இதே தருவைக்குளம் பகுதியில், பின்புறம் சமண குறியீடோடு கூடிய ஓர் சதிக்கல் தன்னால் கண்டறியப்பட்டு 3.11.2024 அன்று ஆவணப்படுத்தப்பட்டது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

ஊர் மக்களின் கருத்துக்கள் படி இத்தகைய தொன்மையான மணல் மற்றும் சுண்ணாம்பு கலவையில் செய்யப்பட்ட ஆட்டுஉரல், தொட்டிகள், அரைக்கும் கற்கள் போன்றவை இன்றும் சிலரது வீட்டு பயன்பாடுகளில் உள்ளன. இத்தகைய மண்ணை கல்லாக்கி உபகரணங்கள், சிற்பங்கள், கட்டிடங்கள் போன்றவை வடிவமைப்பு செய்து இயற்கையோடு வாழ்ந்த நமது தமிழ் மூதாதையர்கள் கலாச்சாரம் போற்றி வணங்க தக்கது. விரைவில் ஆரம்பம் ஆக உள்ள நமது பட்டினம் மருதூர் (சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட) தொல்லியல் கள அகழாய்வு இந்த பகுதியில் நமது தமிழர்களின் நீண்ட நெடிய தொடர் கலாச்சாரத்தின் உண்மையினை உலகுணர செய்வது திண்ணம் என்று தெரிவித்தார்.

1 More update

Next Story