ஆதனகுளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

ஆதனகுளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ஆதனகுளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
Published on

திருச்சிற்றம்பலம்,

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆதன குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார சீர்கேடு

பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் துறவிக்காடு- பேராவூரணி சாலையில் ஆதன குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் மூலம் நரியங்காடு, கல்லூரணிக்காடு, ஒட்டங்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள முக்கிய நீர் பிடிப்பு குளங்களில் ஆதனகுளம் முதன்மையானதாக கருதப்படுகிறது. தற்போது இந்த குளத்தில் காட்டாமணக்கு செடிகள் ஆங்காகே மண்டி காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள தென்னைமர கழிவுகள், மருத்துவக்கழிவுகள், கோழி கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை குளத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

பராமரிக்க வேண்டும்

இந்த குளத்தில் மூன்று கிராமங்களை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் குளிக்கின்றனர். எண்ணற்ற கால்நடைகளும் இங்கு தண்ணீர் அருந்த வருகின்றன. எனவே இந்த ஆதன குளத்தை இனியும் தாமதிக்காமல் பேராவூரணி பொதுப்பணி துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com