5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை
Published on

சத்தியமங்கலம்

5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

தூய்மை பணியாளர்கள்

சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமப்புற தூய்மை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் 11.30 மணி அளவில் சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் ஊர்வலமாக சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு புறப்பட்டனர்.

ஊர்வலத்தின்போது, 'தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். கிராம தூய்மை பணியாளர்கள் அனைவரையும் தாட்கோ மூலம் நல வாரியத்தில் சேர்த்து அடையாள அட்டை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக வழங்க வேண்டும்.' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி தாலுகா அலுவலகத்தை அடைந்தார்கள்.

முற்றுகையிட்டு போராட்டம்

அதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் ஸ்டாலின் சிவக்குமார், தூய்மை பணியாளர்களின் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடராஜ், வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரேம்குமார் அங்கு வந்து தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை அடங்கிய மனு கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com