உளுந்தூர்பேட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்

பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாத ஊதியத்தை எவ்வித தாமதமும் இன்றி உரிய காலத்தில் தடையின்றி வழங்க வேண்டும்.
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்.
தூய்மைப் பணியாளர்கள்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேங்கி, சுகாதார பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

திடீர் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) காலையில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சியில் தினசரி துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு, நிர்வாக தரப்பில் இருந்து முறையான வாழ்வாதார உரிமைகள் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்

பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாத ஊதியத்தை எவ்வித தாமதமும் இன்றி உரிய காலத்தில் தடையின்றி வழங்க வேண்டும். நகரின் பல்வேறு வார்டுகளில் குப்பைகளை அள்ளுவதற்கும், சாக்கடைகளைத் தூய்மைப்படுத்துவதற்கும் தேவையான கையுறைகள், முகக்கவசங்கள், கூடைகள் மற்றும் உரிய தூய்மைப் பணி உபகரணங்களை நகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும்.

பாதிப்புகள்

தூய்மைப் பணியாளர்களின் இந்த திடீர் போராட்ட அறிவிப்பால் உளுந்தூர்பேட்டை நகராட்சியின் முக்கிய வீதிகள், வணிக வளாக பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வழக்கம் போல் நடைபெறும் குப்பை சேகரிப்பு பணிகள் இன்று காலை முதல் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

கொசுத்தொல்லை மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து, அவற்றை நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com