சட்டப்பேரவை தேர்தல்: கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கமல்ஹாசனை சந்திப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வருகை தந்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல்: கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு
Published on

சென்னை,

சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் தீரவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது.

அதிமுக-பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, எல்.முருகன் ஆகியோர் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து பாஜக குழு துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியது.

இதனிடையே அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகி மாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கி இருப்பதாக சரத்குமார், ரவி பச்சமுத்து ஆகியோர் நேற்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வருகை தந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com