சர்வ அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சர்வ அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
Published on

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று சர்வ அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்துக்கு கார், பஸ், வேன், ரெயில்கள் மூலம் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் இருந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப்பணி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் இடையூறு இன்றி நீராடுவது, தரிசனம் செய்வது உள்ளிட்ட வசதிகளை செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com