

சென்னை
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பது குறித்த விவரத்தையும் எழுத்துபூர்வமாக அரசு மருத்துவர் பாலாஜி இன்று தாக்கல் செய்தார்.
சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் செயலாளர்களாக பணியாற்றிய வெங்கட்ரமணன், விஜய குமார், ராமலிங்கம், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.
வெங்கட்ரமணன் வருகிற 30-ந்தேதியும், விஜயகுமார் 31-ந்தேதியும், ராமலிங்கம் பிப்ரவரி 1-ந்தேதி, ஜெயஸ்ரீ முரளிதரன் 2-ந்தேதியும் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது.
இவர்களில் வெங்கட ரமணன் ஓய்வு பெற்று விட்டார். மற்ற 3 பேரும் தற்போது அரசு பணியில் உள்ளனர்.
இதேபோல் ஜெயலலிதா கார் டிரைவர் ஐயப்பன், பிப்ரவரி 8-ந்தேதி ஆஜ ராகவும், சசிகலாவின் செயலாளர் கார்த்திகேயன் பிப்ரவரி 5-ந்தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மரணம் பற்றி புகார் கூறியவர்களின் ஆவணங்களை சசிகலா கேட்டுள்ள நிலையில் , புகார் கூறியவரை குறுக்கு விசாரணை செய்ய சசிகலா வக்கீல் கோரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலாவின் கோரிக்கையை ஏற்றால் விசாரணை தாமதமாகும் என்று குறிப்பிட்ட ஆறுமுகசாமி ஆணையம், சசிகலாவை சிறையிலேயே சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Jayalalithaa #Sasikala #JayalalithaaDeath