

மதுரை,
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் 2020 ஜூன் 19-ல் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கை, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்கும் தூக்குத் தண்டன விதித்து, ஏப்ரல் 6-ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தூக்குத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராம கிருஷ்ணன் அமர்வு அறிவித்துள்ளனர்.
விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதிப்படுத்த கோரிய மனுவின் விசாரணை ஜூன் 4-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், 15 நாட்கள் பரோல் விடுப்பு கோரிய மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.