சாத்தான்குளம் தந்தை- மகன் மரண வழக்கு:காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம் தந்தை- மகன் மரண வழக்கு:காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது
Published on

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, நேற்று இரவு எஸ்.ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று காலை மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் வழியாக தப்ப முயன்ற ஸ்ரீதரை வழிமறித்த சிபிசிஐடி போலீசார், தூத்துக்குடி அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே போலீசார் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் - மரண வழக்கில் ஏற்கனவே ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது நினைவிருக்கலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com