

மதுரை,
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.இந்த வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை கைது செய்தனர். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்தது. அதன்பேரில் புதுடெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி மாலையில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ இன்று விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை இன்று தொடங்க உள்ள நிலையில், வழக்கு ஆவணங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.