

புதுச்சத்திரம் வட்டார வள மையத்தின் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களை பள்ளியில் சேர்க்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வட்டார, பள்ளி அளவில் செயல்பட்டு வருகின்றனர். இதன்படி வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியம், ஆசிரியர் பயிற்றுனர்கள் சிந்துஜா, கவுரிசங்கர், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அன்பழகி, ஸ்ரீதரன் அடங்கிய குழுவினர் திருமலைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் பெரிய காலனி மற்றும் திருமலைப்பட்டி பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் 10 பேர் மற்றும் அவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுரை வழங்கினார்.
அதேபோல் ஏளூர் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் ஏளூர் ஊராட்சி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில் 4 குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியதன்பேரில் வசந்த், பிரனேஷ் மற்றும் பரத்குமார் ஆகியோர் கீரம்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.