

திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே சங்கம் கமுகக்குடியைச் சேர்ந்தவர் கருணாநிதி (42 வயது). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சஹானா (16 வயது). இவர் அம்மையப்பனில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13-ந்தேதி சஹானாவின் தோழி, யாழினி என்பவர் இறந்து விட்டார். தோழியின் துக்கத்திற்கு செல்ல வேண்டும் என சஹானா தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவரது பெற்றோர், பிறகு வேறொரு நாளில் சென்று துக்கம் விசாரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
தோழி இறந்த சோகத்தில் இருந்த சஹானா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சஹானாவை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஹானா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கருணாநிதி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழி இறந்த துக்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.