பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தாள். பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால் சிறுமி மட்டும் தனியாக இருந்ததை அறிந்த வேல்முருகன் (வயது 42) என்ற தொழிலாளி, சிறுமியின் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்தார். அவர் சிறுமியின் தந்தை ஆதார் அட்டையை கேட்பதுபோல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, வேல்முருகனிடம் இருந்து தப்பி ஓடி அருகில் உள்ள வீட்டுக்குள் சென்றுவிட்டாள். நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இது குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தில் வேல்முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






