காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு

FILEPIC
காலாண்டுத் தேர்வு தொடர் விடுமுறையானது இன்றுடன் நிறைவடைகிறது.
சென்னை,
தமிழகத்தில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான காலாண்டுத் தேர்வு, கடந்த மாதம் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26-ம் தேதி வரை முதலாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கு நடைபெற்றது. அதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 27-ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வு விடுமுறையானது தொடங்கியது. அன்று முதல் இன்று (அக்டோபர் 5-ம் தேதி) வரை என தொடர் விடுமுறையாக, இந்த காலாண்டு விடுமுறையானது விடப்பட்டது.
இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி, காந்தி ஜெயந்தியும் போன்ற பண்டிகைகளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தநிலையில், காலாண்டுத் தேர்வு தொடர் விடுமுறையானது இன்றுடன் நிறைவடைகிறது. நாளை (அக்டோபர் 6-ம் தேதி) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும்.இதனையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழிகாடுதல்கள் அனுப்பப்பட்டுள்லன. அவற்றை பின்பற்றி தலைமையாசிரியர்கள் துரிதமாக செயல்பட வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைத்து அங்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
* மழையின் போது பள்ளியின் சுற்றுச் சுவரின் 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள்,மூடப்பட்டு உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்
*பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்
* பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட மின்சாதனப் பொருட்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
32 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார்கள் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.






