வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களை பிடித்த போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

பரனூர் சுங்கச்சாவடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்களை பிடித்த போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களை பிடித்த போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
Published on

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு தாலுகா குற்றப்பிரிவு போலீஸ்காரர் அருள் சாதாரண உடையில் பணியில் இருந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி பணம் பெற முயன்றனர். இதை பார்த்த போலீஸ்காரர் அருள் அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்களில் ஒருவர் கத்தியால் போலீஸ்காரர் அருளின் தோளில் வெட்டினார். பின்னர் அவர்கள் இருவரும் தப்பிச்சென்று விட்டனர். போலீஸ்காரர் அருள் துரத்தி சென்று வெட்டிய நபரை பிடித்தார். விசாரணையில் அவர் ஒழலூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் (வயது 22) என்பது தெரியவந்தது. போலீஸ்காரர் அருளுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சுதர்சனிடம் இருந்த அரிவாளை கைப்பற்றினார். தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com