

ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று கடல் உள்வாங்கி காணப்பட் டது.
இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல் லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே சனி, ஞாயிறு 2 நாட் கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்து இருந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.
மேலும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ரூ.100, ரூ.200 இலவச தரிசன பாதையிலும், பொது தரிசன பாதையிலும் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். அதேபோல் ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த ராமர் பாதம், தனுஷ் கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் புயலால் அழிந்து போன தனுஷ் கோடி கம்பிப்பாடு கடற்கரை மற்றும் அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு சென்று கடலின் அழகை பார்த்து ரசித்து சென்றனர். இதனால் தனுஷ்கோடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதற்கிடையே ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலில் உள்ள பாசி, பாறைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. நேற்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கி இருந்ததால் புனித நீராட சிரமப்பட்டனர். மேலும் அங்கு வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கியதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.
காலை 9 மணி வரை உள்வாங்கி இருந்த கடலானது அதன் பிறகு நேரம் செல்ல செல்ல மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. காற்று காலத்தில் அக்னி தீர்த்த கடல் மற்றும் துறைமுக பகுதியில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்று தான் என மீனவர்கள் தெரிவித்தனர்.