திருச்செந்தூரில் கடலில் மாயமான மீனவர்களை 4-வது நாளாக தேடும் பணி தீவிரம்

திருச்செந்தூர் சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 120 படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான 2 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.
திருச்செந்தூரில் கடலில் மாயமான மீனவர்களை 4-வது நாளாக தேடும் பணி தீவிரம்
Published on

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த மீனவர்கள் கடந்த 1-ந் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் சென்றனர். அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டு இருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது 32), பிரசாத் (40), பால்ராஜ் (22), நித்தியானந்தம் (42) ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த காற்றின் காரணமாக கடலில் கவிழ்ந்தது.

இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததை பார்த்த சக மீனவர்கள் விரைந்து சென்று காப்பாற்றினர். மேலும் அஸ்வின், பிரசாத் ஆகியோரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று முன்தினம் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான 2 கப்பல்கள், விமானம், ஹெலிகாப்டர் மூலமும் மாயமான 2 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. எனினும் மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 3-வது நாளாக நேற்றும் கப்பல்கள், விமானம், ஹெலிகாப்டர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் படகில் சென்று மாயமான 2 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பணி இரவு வரை நீடித்தது. ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை.

இன்று (வியாழக்கிழமை) திருச்செந்தூர் சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 120 படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான 2 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com