

சென்னை,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான 2-ம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை செயல்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் (கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), சைதாப்பேட்டை, செ-15, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), திருவல்லிக்கேணி, செ-05.) 70 காலியிடங்கள் மற்றும் 10 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 508 காலியிடங்கள் என மொத்தம் 578 இடங்கள் உள்ளன.
இதனை நிரப்பும் பொருட்டு பி.எட். பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
10 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளாவன:-
1.அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி, 2. என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி, 3.ஸ்ரீஆர்.கே.எம்.வி. ஆடவர் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர், 4.வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி, 5.மெஸ்டன் கல்வியியல் கல்லூரி (இருபாலர்), ராயப்பேட்டை, 6.தூய சேவியர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை, 7.ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரி, அசோக் நகர், 8.தூய கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி, வேப்பேரி, 9.தூய இக்னேஷியஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை, 10.என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி, ஆத்தூர், திருவட்டாறு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.