குடும்ப ஓய்வூதியம் பெற 2-வது மனைவிக்கு உரிமை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு

அந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே தமிழரசியை சமன் திருமணம் செய்துள்ளார்.

குடும்ப ஓய்வூதியம் பெற 2-வது மனைவிக்கு உரிமை இல்லை
ஐகோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை,

முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாததால், அரசு ஊழிய ரின் 2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

இரண்டாவது மனைவி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் அரசு ஊழியராக பணியாற்றியவர் ஆர்.சமன். இவரது மறைவுக்குப் பிறகு, சமனின் இரண்டாவது மனைவியான தமிழரசி, குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசுக்கு விண்ணப் பம் செய்தார். சமன் தனது முதல் மனைவி நளினியை விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என அரசு மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழரசி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தகுதி இல்லை

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரம ணியம், கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன் ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:-

மறைந்த அரசு ஊழியர் சமனும், அவரது முதல் மனைவி நளினியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பரம் பிரிந்து கொள்வதாக ஒப்பந்தம் செய்து அதை பதிவுச் செய்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தின்படி பிரிந்துள்ளனர். ஆனால், இவர்கள் செய்துள்ள இந்த ஒப்பந்தம் சட்டப்படியான விவாகரத்தாக கருத முடியாது. மேலும், அந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே தமிழரசியை சமன் திருமணம் செய்துள்ளார். எனவே, இவர்களது திருமணமே செல்லத்தக்கது அல்ல. அதனால், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி, தமிழரசி குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

ரத்து

அதுமட்டுமல்ல தமிழரசி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். அவர் ஏற்கனவே தமிழ்நாடு அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்த காரணங்களால், தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்கிறோம்

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com