

தமிழகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 1.6.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 104 இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். இவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் பத்மா, முத்துமாரி, எஸ்தர்சாந்தகுமாரி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை பள்ளிக்கு செல்லமாட்டோம் என்றும் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.