

சென்னை,
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விவகாரத்தில் ஒரு செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தடைகளைத் தாண்டி மக்கள் நலன் காப்பதே மோடி பாணி.
தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. குற்றங்களின் எண்ணிக்கையை மறைப்பதற்காகப் புகார்களைப் பதிவு செய்யவே போலீஸ் மறுக்கிறது.
கோவையில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர். கரூர் சம்பவத்துக்கு உடனடியாக அங்கு ஓடிச் சென்று அன்பில் மகேஷ் அழுதாரே. கோவைக்கு ஏன் செல்லவில்லை. அமைச்சர்கள் வெறும் அரசியல் நாடகங்களை நடத்துகிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை.
எனவே, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து, 15-ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.