

சென்னை,
வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இயற்றமிழ் மூலம் இசை தமிழ் தந்த தமிழ் பெருங்கவி சங்கத்தமிழ் சாறெடுத்து தங்கத்திரை தட்டில் வைத்து கவித்தமிழ் அமுதூட்டிய ஆண் அன்னை! செந்தமிழ் சொல்லெடுத்து தேன்மொழி வார்த்த தென்மொழிப் பாவலன்!
காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால், ஞாலம் உள்ள வரை நிலைக்கும் தன் மொழியால், இறவா இலக்கியம் படைத்து சிகரங்களை தொட்டு கள்ளிக்காட்டு இதிகாசம் கண்டு, கருவாச்சி காவியம் வடித்து, மூன்றாம் உலகப்போர் தொடுத்து, தண்ணீர் தேசம் நிறைத்து, தமிழாற்றுப்படை கண்ட எங்கள் கவியாற்றுப்படை! கவி உலகின் தமிழ் அடையாளம்!
மகாகவிதையாய் வீசி மனங்களை வருடிய வடுகப்பட்டியின் தமிழ் தென்றல்! வையம் உள்ளவரை ஐயா வைரமுத்துவின் வைரத் தமிழ் உலகில் உலவும்! ஞாலத்து விருதுகளையெல்லாம் தம் ஞானத்துச் செறிவால் தமிழ் அன்னையின் காலடியில் சேர்ப்பித்த ஈடு இணையற்ற என் மண்ணின் கவிஞன்!
முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.