

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, அதன் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது.
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே கூறிவிட்டார்.
இந்தநிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலையொட்டி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது அக்கட்சி. திருச்சியில் நாளை நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 117 பெண் வேட்பாளர்களும் 117 ஆண் வேட்பாளர்களும் என 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவிக்கிறார் சீமான்.