நடிகை விஜயலட்சுமி வழக்கில் இன்று மாலை ஆஜராகிறார் சீமான்?


நடிகை விஜயலட்சுமி வழக்கில் இன்று மாலை ஆஜராகிறார் சீமான்?
x

சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனராக பணியாற்றியபோது அவருக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சீமான் பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். அவர் திடீரென்று சீமான் மீதான புகாரை கடந்த 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றார். இந்த நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்வதற்கு வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அவருடைய கோரிக்கையை ஐகோர்ட்டு நிராகரித்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பெங்களூருவுக்கு சென்று நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வழக்கு தொடர்பான புகைப்படங்கள், 'ஆடியோ' உரையாடல்கள் போன்ற தகவலை சேகரித்தனர்.

இதற்கிடையே சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் 27-ந்தேதி (அதாவது நேற்று) பகல் 11 மணியளவில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். சீமான் வெளியூர் சென்றிருப்பதால் அவர் ஆஜராகுவதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி நேற்று பகலில் ஒட்டி சென்றார். அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (அதாவது இன்று) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்மனை கிழித்தெறிந்த வீட்டின் பணியாளரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை தடுத்து நிறுத்திய வீட்டின் காவலாளியும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காவலாளியும், பணியாளரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி பாலியல் புகாரில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சீமானுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கியிருந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மாலை 6 மணிக்கு சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரியில் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு 6 மணிக்கு சீமான் சென்னை திரும்புகிறார்.

1 More update

Next Story