வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

வெளிநாட்டுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
Published on

நாகப்பட்டினம்,

கடல்வாழ் உயிரினங்களில் கடல் அட்டை உள்ளிட்ட அழிந்துவரும் அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாகையில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல அதிகளவில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு குடோனில் பெட்டி, பெட்டியாக பதப்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு

விசாரணையில், நாகையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்ததும், போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை வனச்சரக அலுவலத்தில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com