ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சிவகங்கை நகரில் தடை செய்யப்பட்ட 1 டன் அளவிலான பிளாஸ்டிக், பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

சிவகங்கை

சிவகங்கை நகரில் தடை செய்யப்பட்ட 1 டன் அளவிலான பிளாஸ்டிக், பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

திடீர் சோதனை

சிவகங்கை பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, கப்புகள் உபயோகப்படுத்தப்படுவதாகவும், அதேபோல் அப்பகுதியில் செயல்பட்டுவரும் உணவகங்களில் கெட்டுப்போன உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து மாவட்டஉணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தென்னாயிரம் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் இணைந்து அப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி அரண்மனைவாசல் பகுதியில் மளிகை கடைக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்ததில் 1 டன் அளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடும் நடவடிக்கை

மேலும் பஸ் நிலைய பகுதியில் உள்ள பல்வேறு உணவு கடைகளிலும் சோதனை செய்தனர். அதில், கெட்டுப்போன இறைச்சி மற்றும் கலர் ரசாயன பொடிகள் பயன்படுத்திய உணவு பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அதன்பின்னர் சிவகங்கை வாரச்சந்தையிலும் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ அளவிலான அழுகிய மீன்கள் மற்றும் 50 கிலோ அளவிலான இறைச்சியையும் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள், கெட்டுபோன இறைச்சிகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கெட்டுப்போன உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com