திருச்சியில் 14ஆம் தேதி உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கம்... காவேரி கூக்குரல் ஏற்பாடு

உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழாவில் முன்னோடி வெற்றி விவசாயிகள் தங்களது நேரடி சாகுபடி அனுபவங்களை வழங்க உள்ளனர்.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா" என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, செய்தியாளர் சந்திப்பு
திருச்சியில் நடைபெற உள்ள கருத்தரங்கம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு
Published on

சென்னை,

சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா" என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் வரும் 14-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (11/06/2026) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் மண் காப்போம் - காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர்கள் சுவாமி ஸ்ரீமுகா, தமிழ்மாறன் மற்றும் மண்வள மேம்பாட்டிற்காக ஐநாவின் விருது வென்ற ஒரே இந்திய விவசாயி வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் தமிழ்மாறன் பேசுகையில், “ஒற்றைப்பயிர் சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு வருமானம் குறைகிறது. விவசாய நிலங்களில் மண் வளம் குறைதல், அதிக நீர்த்தேவையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஆகையால், காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளிடம் மரம் சார்ந்த பலபயிர் சாகுபடி விவசாய முறையை பெருமளவில் முன்னெடுத்து வருகிறோம். இந்த விவசாய முறையால் மண் வளம், மண்ணின் நீர்ப்படிக்கும் திறன், நதிநீர் வளம் ஆகியன உயர்வதோடு விவசாயிகளின் வருமானமும் அதிகளவில் உயர்கிறது.

அதே போன்று மக்களின் ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்புறத்திலும் ஒரு சிறிய பழமரங்களுடன் உணவுக்காடு இருந்தது. இன்று அந்த உணவுக்காடுகள் பெருமளவில் அழிந்துவிட்டன. தமிழக விவசாயிகளும் சமீபகாலமாக ஒற்றைப்பயிர் சாகுபடிக்கு மாறிவிட்டனர். இதனால் அதிக நஷ்டங்களை சந்திக்கின்றனர். ஆகையால், பாரம்பரிய உணவுக்காடு முறையை மீண்டும் பரவலாக்கும் நோக்கில் பழங்களின் உற்பத்தி, மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில் காவேரி கூக்குரல் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது” என்றார்.

ஐநாவின் விருது வென்ற ஒரே இந்திய விவசாயியான பொள்ளாச்சியைச் சேர்ந்த வள்ளுவன் பேசுகையில், “2009-ஆம் ஆண்டுக்கு முன்பு நானும் ஒற்றைப்பயிர் சாகுபடியையே செய்து வந்தேன். தேங்காய் விலை சரியும்போதெல்லாம் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு மாற்றாக, ஈஷா காவேரி கூக்குரல் குழுவினரும் நம்மாழ்வார் ஐயா போன்ற அறிஞர்களும் வழங்கிய வழிகாட்டுதலின்படி பல்லடுக்கு விவசாய முறையை மேற்கொண்டேன். இன்று தென்னையுடன் 14 வகையான பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்து, மண்ணின் வளத்தையும் நீர் பிடிப்புத் தன்மையையும் உயர்த்தியுள்ளேன். இதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான வருமானம் கிடைப்பதுடன், எனது விவசாய வருமானம் 5 முதல் 8 மடங்கு வரை அதிகரித்துள்ளது. 17 வருட இயற்கை விவசாயப் பயணத்தில், தமிழ்நாடு அரசின் ஆர்கானிக் சான்றிதழ் மூலம் எங்கள் பொருட்கள் 0% நஞ்சில்லாத உணவு என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.

கருத்தரங்கின் சிறப்பம்சங்கள்

இந்த மாபெரும் நிகழ்வு மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கி நடைபெறுகிறது. முதலாவதாக, இந்தியாவின் 4 முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று நவீன தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இரண்டாவதாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி வெற்றி விவசாயிகள் தங்களது நேரடி சாகுபடி அனுபவங்களையும் வழங்குகின்றனர்.

மூன்றாவதாக, நுகர்வோருக்கும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை உருவாக்குவதற்காக பிரம்மாண்டமான வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது.

முன்பதிவு

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய forms.gle/rvAxzjx82Gn33uhp8 என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம் அல்லது 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com