8 பேரின் ரத்த மாதிரி சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு

வேங்கைவயல் வழக்கில் 8 பேரின் ரத்த மாதிரிகள் சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யக்கோரும் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (புதன்கிழமை) கோர்ட்டில் நடைபெற உள்ளது.
8 பேரின் ரத்த மாதிரி சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு
Published on

ரத்த மாதிரி

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரியை சேகரித்து தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதில் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

இதில் அந்த மாதிரியின் முடிவுகளை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் ஒப்பிட்டு அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் வேங்கைவயல் மற்றும் இறையூர் பகுதியை சேர்ந்த 21 பேரிடம் இதுவரை டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 5-ந் தேதி 8 பேரிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரி சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

நாளை விசாரணை

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 5-ந் தேதி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (புதன்கிழமை) வருகிறது. இதில் சிறுவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்ட பின் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கோர்ட்டில் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com