

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் முதியோர்களுக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்திடும் வகையில், கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் ஜூன் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அடுத்த அரையாண்டிற்கு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்குரிய பஸ் பயண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை 40 மையங்களில் (பஸ் நிலையங்கள், பணிமனைகள்) வருகிற 21-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், வழக்கம் போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.
சென்னை வாழ் முதியோர்கள், இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.