காகித ஆலை முதுநிலை மேலாளர் தற்கொலை

குடும்ப பிரச்சினையில் கரூர் காகித ஆலை முதுநிலை மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காகித ஆலை முதுநிலை மேலாளர் தற்கொலை
Published on

காகித ஆலை முதுநிலை மேலாளர்

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே உள்ள மசக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). இவர் புகழூர் காகித ஆலையில் முதுநிலை மேலாளராக (கொள்முதல்) வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி (42). இந்த தம்பதிக்கு கிருத்திக் (12) என்ற மகன் உள்ளான். இவன் புன்னம் சத்திரத்தில் ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.இவர்கள் அனைவரும் காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிவக்குமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இதையடுத்து சிவக்குமார் காகித ஆலையில் உள்ள வீட்டிற்கு செல்லாமல், கடந்த ஒரு வாரமாக தனது சொந்த ஊரான மசக்கவுண்டன்புதூரில் பெற்றோருடன் தங்கி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள தனது தோட்டத்திற்கு சென்ற அவர் ஒரு மரத்தில் கயிற்றில் தூக்குப்போட்டுக் கொண்டார்.இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உறவினர்கள் அங்கு வந்து சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உறவினர்கள் கதறல்

இந்த தற்கொலை குறித்து தகவல் அறிந்த சிவக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலை பார்க்கும் பணியாளர்கள் மருத்துவமனையில் குவிந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.இந்த தற்கொலை குறித்து ஜயந்தி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com