சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணியால் பரபரப்பு

பயணியின் தந்தையிடம் விசாரித்தபோது, மன அழுத்தம் காரணமாக தனது மகன் இதுபோல் செய்ததாக கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணியால் பரபரப்பு
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். பயணிகள் உடைமைகள் சோதனை முடிந்து குடியுரிமை சோதனைக்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அமெரிக்க குடியுரிமை பெற்ற பெத்தனன் இளங்கோ (வயது 47) என்ற பயணி, அந்த விமானத்தில் தனது தந்தையுடன் அபுதாபி வழியாக அமெரிக்கா செல்வதற்காக வந்திருந்தார். அவரும், அவரது தந்தையும், குடியுரிமை சோதனைக்கு நடந்து சென்றபோது திடீரென பெத்தனன் இளங்கோ, விமான நிலையத்திலேயே தனது ஆடைகளை கலைந்து நிர்வாணமாக ஓடினார். இதை கண்டு சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வந்து நிர்வாணமாக ஒடிய பயணியை சூழ்ந்து கொண்டு அவரை கட்டாயப்படுத்தி, ஆடைகளை மீண்டும் போடச் செய்தனர். பயணியின் தந்தையிடம் விசாரித்தபோது, தனது மகன் மன அழுத்தம் காரணமாக இதுபோல் செய்து விட்டதாக கூறினார்.

ஆனால் விமான நிறுவனம், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பயணியை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதுடன் தந்தை-மகன் இருவரது விமான பயணத்தை ரத்து செய்தனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து உடல் நலம் தேறிய பின் மீண்டும் பயணிக்கும்படி அதிகாரிகள் கூறினார்.

அவர், மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தான் அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து தந்தை-மகன் இருவரையும் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மீண்டும் மதுரைக்கே அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com