

சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக மக்களை வஞ்சித்த தீயசக்தி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவும், தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற உறுதியோடும் களப்பணியாற்றி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் பாஜக தேசிய மகளிரணி தலைவி அக்கா வானதி சீனிவாசனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கொங்கு பகுதியின் பெருமையாக இருக்கும் கோவை மாவட்டத்தில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. கஞ்சா புழக்கமும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக, கோவை மாநகரத்தை புறக்கணித்து, வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்ட திமுக ஆட்சியை விரட்டியடித்து வளர்ச்சியின் பக்கம் நிற்கும், மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் கோவை வடக்கு பகுதிக்கு தேவை என்பதை மக்கள் நன்கு அறிந்து புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
கரூரில் தோற்கப்போவது உறுதி என்று தெரிந்து கொண்டு கோவைக்கு ஓடிவந்த செந்தில் பாலாஜி, அந்த ஊரில் செய்த வித்தைகளை பயன்படுத்தி கோவையில் வெற்றி பெற்றுவிடலாம் என பொய் கணக்கு போட்டிருக்கிறார். ஆனால், திமுகவின் ஊழல் கூட்டத்திற்கே முடிவு கட்ட வேண்டும் என்ற உறுதியோடு தமிழக மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.
கோவை மாநகரம் வளர்ச்சி பெறவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், பாஜக வெற்றி வேட்பாளர் வானதி சீனிவாசனை கோவை வடக்கு தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! வளமான கோவை மலரட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.