மீனவர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

மீனவர்களுக்கென தனி கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
Published on

சென்னை,

சட்டப்பேரவையில் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ரூ.50 கோடியில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விசைப்படகுகளுக்கும் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கி போல, மீனவர்கள் வங்கி சேவையை எளிதில் பெற தனி கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகை மீன்பிடித் துறைமுகம் ரூ.81 கோடியில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும். அயிரை மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு அயிரை மீன் ஆராய்ச்சி மையம் ரூ.2.9 கோடியில் அமைக்கப்படும்.

கடலில் காணாமல் போகும் மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழை குறைந்தபட்ச நாட்களில் கொடுக்கவும், இடைப்பட்ட காலத்தில் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியையும் உயர்த்தி வழங்கவும் முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com