

சென்னை,
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக காய்கறி விலை அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறி விலை வெகுவாகவே உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், அத்தியாவசிய உணவுப்பொருளான தக்காளி விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. முருங்கைக்காய் ரூ.110-க்கும், கத்தரிக்காய், கேரட், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 2 மடங்காக அதிகரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்தால் விலை மேலும் அதிகரிக்கும் என கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறுகின்றனர்.