

தூத்துக்குடியைச் சேர்ந்த மரியவிக்டோரியாள் ராணி என்பவர் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றிருந்தார். கடனுக்கான தவணையை செலுத்தும் போது ரெக்கவரி கட்டணம் சேர்த்துக் கட்டினால்தான் ரசீது கொடுக்கப்படும் என கூறியிருந்தனர். ஆனால் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி இது போன்ற சரத்துக்கள் இல்லையென்று மனுதாரர் கூறியும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் கேட்கவில்லை.
ஆகவே வேறு வழியின்றி இரண்டு முறை ரெக்கவரி கட்டணத்தையும் சேர்த்து தவணையை செலுத்தியுள்ளார். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக வழக்கறிஞர் மூலம் நுகர்வோர், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீலபிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ரெக்கவரி கட்டணமாக செலுத்தப்பட்ட ரூ.8,212, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.28,212 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் வரை ஒரு ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.