சேவைக் குறைபாடு: மின் நுகர்வோருக்கு மின்வாரியம் ரூ.62 ஆயிரம் வழங்க உத்தரவு

கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் தனது நிலத்தின் மேல்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி வடத்தை மாற்றுவதற்காக சங்கரன்கோவிலில் மின்வாரிய செயற்பொறியாளரிடம் விண்ணப்பித்தார்.
சேவைக் குறைபாடு: மின் நுகர்வோருக்கு மின்வாரியம் ரூ.62 ஆயிரம் வழங்க உத்தரவு
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த பிச்சம்மாள், அய்யனேரி கிராமத்தில் உள்ள தனது நிலத்தின் மேல்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி வடத்தை மாற்றுவதற்காக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளரிடம் விண்ணப்பித்தார். அந்த இடத்தை அலுவலர்கள் பார்வையிட்டு, மின்கம்பி வடத்தை மாற்றுவதற்கான செலவு குறித்து கூறினர். பிச்சம்மாள் பணத்தை செலுத்தியதையடுத்து, மின்கம்பி மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் தவறான கணக்கீட்டின் அடிப்படையில் அதிக பணம் பெறப்பட்டதாகத் தெரியவந்ததால், பிச்சம்மாள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், அவர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர், மனுதாரர் செலுத்திய மொத்தத் தொகையில் மீதித் தொகையான ரூ.27,152, சேவைக் குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.62,152-ஐ 6 வாரத்துக்குள் வழங்குமாறும், இல்லையெனில் தொகையை செலுத்தும் தேதிவரை 9 சதவீத வட்டியுடன் வழங்குமாறும் மின்வாரியத்துக்கு உத்தரவிட்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com