சேவை குறைபாடு: தனியார் ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்- நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரை, ஒரு தனியார் ஆம்னி பேருந்து ஊழியர்கள், முன்பதிவு செய்த இடத்திற்கு செல்லாமல், அதற்கு முன்பாக உள்ள பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.
Published on

தூத்துக்குடி,

சேவை குறைபாடு புகார் காரணமாக தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு ரூ.2.10 லட்சம் அபராதம் விதித்துத் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சண்முக சிகாமணி நகர், பல்லக்கு ரோடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜான் பிரேம்குமார் மகன் ரூபன் பால் (வயது 21). இவர் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

ஆம்னி பேருந்து பயணம்

இவர் கடந்த 24.1.2026 அன்று கோவில்பட்டியில் இருந்து தனது கல்லூரி அமைந்துள்ள கோவை காருண்யா நகருக்குச் செல்வதற்காக, 'ஏர் இந்தியா' என்ற தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.500 செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தார். அன்று இரவு 11:40 மணிக்குக் கோவில்பட்டியில் இருந்து அப்பேருந்தில் கோவைக்குப் புறப்பட்டார்.

பேருந்து சேவை குறைபாடு

மறுநாள் (25.1.2026) காலை கோவை சென்றடைந்ததும், மாணவர் முன்பதிவு செய்த இடமான காருண்யா நகரில் இறக்கிவிடாமல், அதற்கு முன்பாகவே காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் அவரை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளனர். பேருந்து ஊழியர்களிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி, அம்மாணவர் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து மூலமாகவே கல்லூரிக்கு சென்றடைந்தார்.

ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

இதுகுறித்து மாணவரின் தந்தை ஜான் பிரேம்குமார் ஆம்னி பேருந்து நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களும் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் முத்துசாமி மற்றும் கௌதம் ஆகியோர் வாதாடினர். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத், சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 135 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com