சேவைக் குறைபாடு: வழக்கறிஞருக்கு நஷ்ட ஈடு வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு மொபைல் கடையில் ஒரு மடிக்கணிணி வாங்குவதற்கு ரூ.35,000 ஐ அட்வான்ஸ் தொகையாக செலுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துராம், தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு மொபைல் கடையில் ஒரு மடிக்கணிணி வாங்குவதற்காக ரூ.35,000 ஐ அட்வான்ஸ் தொகையாக செலுத்தியுள்ளார். மீதிப்பணத்தை மடிக்கணிணியை பெற்றுக் கொள்ளும் போது செலுத்திக் கொள்ளலாம் எனவும், 3 நாட்களில் டெலிவரி செய்யப்படும் எனவும் கடைக்காரர் உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையில் மீதி பணத்தையும் செலுத்த வேண்டும் எனக் கூறியதால் அதையும் நுகர்வோர் செலுத்திவிட்டார். ஆனால் முழுத் தொகையையும் செலுத்திய பிறகும், குறிப்பிட்ட நாளில் மடிக்கணிணி டெலிவரி செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் தனது மகனின் கல்வி பயன்பாட்டிற்கு மிக அவசரமாக மடிக்கணிணி தேவைப்பட்டதால் மற்றொரு கடைக்காரரிடம் அதிக விலை கொடுத்து புதிதாக வாங்கியுள்ளார்.
எனவே முழுப்பணத்தையும் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் மடிக்கணினி டெலிவரி செய்யாத மொபைல் கடைக்காரருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.10,000 வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.15,000 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.






