தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,292 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல் உள்பட 10 இடங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,292 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,292 வழக்குகளுக்கு தீர்வு
Published on

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தேசிய மக்கள் நீதிமன்றம்  நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்பட 10 நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்காக ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீதிபதி, வக்கீல்களை கொண்ட அமர்வு அமைக்கப்பட்டன. இந்த அமர்வு முன்னிலையில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரும் நேரில் வரவழைக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது.

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி லதா தலைமை தாங்கி பேசினார். மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் (பொறுப்பு) விஜயகுமார், வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிபதி ஜான்மினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா வரவேற்றார். இதில் நீதிபதிகள் மீனாசந்திரா, மோகனா, தமிழரசி, சாமுண்டீஸ்வரிபிரபா, பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில், வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் வங்கி வராக்கடன், கல்வி கடன், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 2 ஆயிரத்து 292 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.10 கோடியே 42 லட்சத்து 16 ஆயிரத்து 766 தீர்வு தொகையாக வழங்கப்பட்டது. அதில் 115 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் மட்டும் ரூ.5 கோடியே 59 லட்சத்து 831 இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com